கம்பிவடம் இல்லாத உலகம்!
விரைவில் கம்பிவடம் இல்லாத உலகத்தைப் பார்க்கப்போகிறோம். ஆமாம், இண்டெல் நிறுவனம் வை-ஃபை (Wi-Fi) தொழில்நுட்பத்தில் இயங்கும் நகரங்களைத்தாண்டி அதன் இணைப்பை கிராமங்கள் தோறும் நீட்டிப்பு செய்யும் வகையில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு கிராம இணைப்பு இயங்குதளம் (Rural Connectivity Platform) எனப்பெயரிடப்பட்டுள்ளது.
இதன் இயக்கமுறைப்படி, முதல் தொடர்புநீட்சி (Antenna) நகரத்தில் இயங்கும் வலையமைப்போடு இணைக்கப்படும். பின்னர் அடுத்தடுத்த தொடர்புநீட்சிகள் 60 மைல் தூரத்திற்கொருமுறை வைக்கப்பட்டு தொடர்பு நீட்டிக்கப்படும். புவியின் குவித்தன்மையின் காரணமாக அதற்குமேல் நீட்டிக்கமுடியாது.
இன்டெலின் ஆரம்பகால சோதனையில் வெற்றிகரமாக 30 மைல் தூரத்துக்கு எந்தவிதமான இடையூறுகளுமின்றி தகவல் பரிமாற்றம் நடத்தப்பட்டது. சாதாரண வை-ஃபை தொடர்புநீட்சிகளே இதில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதன் வீரியத்தை அதிகரிக்க சிறப்பு வானலை மென்பொருட்கள் உதவி செய்தன.
இரு முனை கட்டமைப்பை ஏற்படுத்த வெறும் ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மட்டுமே செலவாகுமென்று இண்டெல் தெரிவிக்கிறது. இந்த சோதனை இந்தியா, பனாமா, வியட்நாம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் செய்யப்பட்டது. வியாபார ரீதியாக இந்த செயல்பாடு 2008ம் ஆண்டின் மத்தியில் வரவிருக்கிறது…
ஈரானை வேவு பார்க்கிறது இஸ்ரேல்!
ஈரானின் அணுஆயுதத்தயாரிப்பின் மேல் இஸ்ரேலுக்கு ஒரு பயம் உண்டாகியிருப்பதாகத் தெரிகிறது. எனவே இஸ்ரேல் இந்தியாவின் துணையுடன் ஒற்றறியும் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது. அது இனி இரவு பகல் பாராமல் ஈரானைக் கண்காணிக்கும் என்று அந்த நாட்டின் பாதுகாப்பகம் தெரிவித்துள்ளது. அந்த செயற்கைக்கோளில் அதிநவீன ராடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் TECSAR எனப்படும் இந்த செயற்கைக்கோள் உலகில் மிக அதிநவீன விண்வெளித் தொழில்நுட்பத்தில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இது தயாரிக்கப்படுவதற்கும் ஏவப்படுவதற்கும் மொத்தம் பத்து மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகியிருப்பதாக விண்வெளி ஆய்வுமையம் தெரிவித்துள்ளது!
ஒரு மறுமொழியிடுக