கடவுள் இருக்கிறாரா?
ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் தன் மாணவர்களிடம் ஒரு வித்தியாசமான கேள்வியைக் கேட்டார். “இறைவன் என்று ஒன்று உண்டா?” என்பதுதான் அந்தக்கேள்வி. அனைவரும் அமைதிகாக்க, ஒரு மாணவன் மட்டும் எழுந்து “ஆம் ஐயா… இதிலென்ன சந்தேகம்?” என்றான்.
அவர் தொடர்ந்து “உலகைப் படைத்தவர் அவர்தானா?” என்றார். மாணவர் பதிலுக்கு “ஆம்” என்றான். அவர் “கடவுள் நல்லவரா?… கெட்டவரா?…” என்று தொடர்ந்து கேட்க, “நல்லவர்… மிகவும் நல்லவர்” என்று அந்த மாணவனும் பதிலளித்தான். “கெட்டவைகள் உலகில் உண்டா?” என்றார் பேராசிரியர். மாணவனும் தொடர்ந்து “ஆம் அவைகளும் உண்டு” என்றான்.
“கடவுள்தான் கெட்டவைகளையும் சாத்தானையும் படைத்தாரா…?” என்று கேள்வி வந்தது பேராசிரியரிடமிருந்து. “ஆம்” என்பதுதான் இதற்கும் அந்த மாணவனின் பதில். “கடவுள் கெட்டவைகளைப் படைத்தார்… கெட்டவைகள் இந்த உலகத்தில் உள்ளன! கடவுளால் படைக்கப்பட்டதால் அவரின் ஏற்பாட்டின்படிதான் அவைகள் செயல்படுகின்றன; எனவே கடவுளும் கெட்டவர்தானே…?” என்றார். இதற்கு அந்த மாணவன் தலைகுனிந்தபடி நின்றிருந்தான்.
பேராசிரியர் தொடர்ந்தார்,”கெட்டவரை எந்த நம்பிக்கையில் கடவுளை வணங்குகிறீர்கள், உங்களுக்கு அந்த நம்பிக்கை எப்படி வந்தது… எல்லாம் ஒரு மாயைதான் என்று நீ ஒப்புக்கொள்ள வேண்டுமல்லவா?”.
பேராசிரியர் முடிப்பதற்கு முன்னால் எழுந்த இன்னொரு மாணவர், “ஆசான் அவர்களே… நான் ஒரு கேள்வி உங்களைக் கேட்கலாமா?” என்றான். “கண்டிப்பாக…” என்று மாணவனை மடக்கிய இறுமாப்புடன் பேராசிரியர் கூற, தொடர்ந்தான் மாணவன், “குளிர் என்று ஒன்று உண்டா இந்த உலகத்தில்?”. “என்ன கேள்வி இது? உறுதியாகச் சொல்வேன்… உண்டென்று; உனக்குக் குளிர் அடிப்பதில்லையா?” பதில் வந்தது பேராசிரியரிடமிருந்து. அந்த மாணவனின் கேள்விக்கு அனைவரும் சிரித்தனர். “இல்லையென்று நான் சொல்வேன். இயற்பியல் விதிகளின் படி வெப்பமின்மையைத் தான் நாம் குளிர் என்கிறோம். ஒவ்வொரு ஊடகமும் வெப்பத்தைத்தான் கடத்தும்.
குறைந்த வெப்பநிலையைத் தான் குளிர்ச்சி எனச்சொல்கிறோம். ஆதாவது, 0 டிகிரி செல்சியஸ் எனப்படுவது முழுக்க வெப்பமின்மை”. அனைவரும் அமைதியானார்கள். மாணவன் மட்டும் தொடர்ந்தான், ” ஆசானே… இருட்டு என்று ஒன்று உண்டா?”. பேராசிரியர் இப்பொதும் “கண்டிப்பாக உண்டு” என்றார்.
“மறுபடியும் தவறான பதிலைச் சொல்கிறீர் ஆசானே… இருட்டு என்று ஒன்று கிடையாது, ஒளியின் இல்லாமையைத்தான் நாம் இருட்டு என்கிறோம். ஒளி என்ற ஒரு சக்தியைப் படிக்க முடியும்; ஆனால் இருட்டை… முடியவே முடியாது. ஒளியில்லாமல் போனால் இருட்டு இருக்கும், வெப்பமில்லாமல் போனால் குளிரெடுக்கும்” மாணவன் ஒரிரிரு வினாடி பேசுவதை நிறுத்தினான்.
அறையெங்கும் ஒரே அமைதி. மாணவன் தொடர்ந்தான் “அதுபோலவே, கெட்டவைகள் என்று உலகில் ஒன்று கிடையாது. கடவுளின் தன்மை எங்கெல்லாம் இல்லாமல் போகிறதோ அங்கெல்லாம் கெட்டவைகள் தோன்றும். சாத்தான்கள் என்பவை இருட்டு மற்றும் குளிர் போல; தான் எங்கே இல்லாமல் போனாலும் என்னாகும் என்பதை மனிதனுக்கு விளக்கக் கடவுளால் படைக்கப்பட்டவை. கடவுளின் தன்மைகளான அன்பும் கருணையும் மனதில் இருத்தாமல் இருந்தால் அவனின் வாழ்வில் எவ்வளவு மோசமான விளைவுகள் வரும் என்பதைக்காட்டவே கடவுள் இருட்டை, குளிரை, கெட்டவைகளை மற்றும் சாத்தானைப் படைத்தார்; இவைகள் அனைத்தும் கடவுளின் படைப்புக்கள் மற்றும் அவதாரங்களே!”. மாணவன் சொல்லி முடித்ததும் ஆசிரியர் முகம் தொங்கிப்போய் உக்கார்ந்தார்.
அந்த மாணவன்தான் அல்பர்ட் ஐன்ஸ்டீன் என்று ஒருசாரார் சொல்கிறார்கள். சொன்னது ஐன்ஸ்டீனோ இல்லையோ ஆனால், சொன்ன கருத்து கடவுளே இல்லை எனும் மனிதர்க்கு ஒரு மறுபரிசீலனை விண்ணப்பம்.
தமிழர்களின் நாகரீகம்!
நாகப்பட்டினத்து அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கல்வெட்டுக்களில் இருந்த எழுத்துருவங்கள் சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துருக்களை ஒத்திருப்பதை சமீபத்தில் உணர்ந்திருக்கிறார்கள். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. ஐராவதம் மகாதேவன் செம்பியன்கண்டியூர், மேலப்பெரும்பள்ளம் ஆகிய கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சிந்து சமவெளிநாகரீகத்தின் எழுத்துவடிவங்களைக் கொண்டிருப்பதை உறுதிசெய்துள்ளார். இவை இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதற்குமுன் பள்ளி ஆசிரியர் திரு சண்முகநாதன் ஒரு கற்கால கோடாரியைக் கண்டெடுத்தார். அந்தக் கோடாரியில் சிந்து சமவெளி நாகரீகத்தை ஒத்திருக்கும் எழுத்துவடிவங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாடு சிந்து சமவெளி நாகரீகத்தைத் தொடர்ந்து வந்திருப்பதை உறுதி செய்துள்ளனர்.
மேலும் கோவையிலுள்ள சூலூரில் கண்டெடுக்கப்பட்ட பழம்பெரும் கற்கால அச்சுவட்டுக்கள் தற்போது பாகிஸ்தானில் இருக்கும் ஹரப்பா நாகரீகத்தைச் சார்ந்ததாக உறுதிசெய்யப்பட்டது. தற்போது அது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பொருட்காட்சியிலுள்ளது. இதன்மூலம் தமிழ் மொழியின் வரலாற்றுச்சிறப்பு சாட்சிகளுடன் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழர்கள் அப்பொழுதே கடல்கடந்தும், பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்தும் தங்கள் பரிமாற்றங்களை வைத்துள்ளது உறுதிசெய்யப்படுகிறது.
மேலும் தெரிந்துகொள்ள : படிக்க ஹிந்து நாளிதழ்
முந்துகிறது மைக்ரோசாஃப்ட்!
கொஞ்சம் கொஞ்சமாக கூகுளை எல்லாவிதத்திலும் முந்துகிறது மைக்ரோசாஃப்ட். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் இதுதான் உண்மை! லைவ் மெயில் வெளியானதும் மைக்ரோசாஃப்டின் இணைய ஆதிக்கம் மேலும் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம். மிகவிரைவில் 4 மற்றும் 5 வது இடங்களிலிருந்து 2ம் இடத்துக்கு முன்னேற எல்லா நிலையிலும் தகுதி பெற்றுவிட்டது மைக்ரோசாஃப்ட்.
தற்சமயம் வந்த தகவலின்படி லைவ் சேர்ச் (http://search.live.com) புதுப்பிக்கப் பட்டு விட்டதால் கூகுளைவிட பல மடங்கு வேகமாகச் செயல்படுகிறது என்று தெரிகிறது.
கூகுளில் பணியாற்றிவந்த முக்கிய பெருந்தலைகள் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறி வேறு நிறுவனங்களை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்.
எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!
முப்பரிமாண புவிவரைபடக்களஞ்சியம்!
கூகுள் புவிவரைபடங்களைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. மிகப்பெரிய கலைக்களஞ்சியத் தளங்கள், புவியியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் ஆகியவை புவிவரைபடங்களைத் தனியாக உருவாக்க முடியாமல்/உருவாக்காமல் கூகுளின் வரைபடத்தைத் தான் பயன்படுத்திக் கொள்கின்றன. இவற்றில் முக்கியமானதாகக் கூறப்படுவது விக்கிமேப்பியா (www.wikimapia.org) என்ற கட்டற்ற(Open Source) கலைக்களஞ்சியம் ஆகும். அந்தளவுக்கு கூகுளின் வரைபடங்கள் பிரபலம். மேலும் முப்பரிமாண வீதி வரைபடங்களையும் வெளியிட்டு மிகப் பிரபலமாகத் திகழ்ந்து வருகிறது கூகுள்.
2006ம் ஆண்டு உருவாக்கப்பட்டு தற்போது டெக்-கிரஞ்ச் விருது பெற்றுள்ள ஒரு நிறுவனம் பற்றி உங்களுக்கு அதிகமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வீதிகள் உள்ளிட்ட முப்பரிமாண உண்மை வரைபடங்களை மனிதர்கள் வீதிகளில் நடந்தால் பார்க்கும் கோணத்திலேயே உருவாக்கும் நோக்கத்தில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அடுக்கு அடுக்காக அசைபடக் கருவிகளைக் கொண்டு வாகனங்களை முக்கிய வீதிகளில் வலம்வர வைத்து அதன் மூலம் நேரடிக் காட்சிகளைப் படமாக்கி அவற்றில் தேவையான செய்திகளை ஏற்றி, பார்ப்பவர்களுக்கு தாமே அவ்விடங்களுக்குச் சென்று வலம்வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தி அவர்கள் திரும்பும் வீதிகளைக் காட்டி ஆச்சரியத்தில் மூழ்கடிக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த ஏற்பாட்டை உண்மையைக் கிரமப்படுத்துதல்(Indexing reality) என்று அழைக்கிறார்கள் இவர்கள்.
தற்போது சோதனைக்காக இந்த ஒருங்கிணைப்பு வெற்றிகரமாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சமே துல்லியமான அளவீடுகள் மற்றும் பயனரின் தேவைக்கேற்ற மாற்றங்களை உள்ளடக்கிக் கொள்ளும் தன்மை என கூறப்படுகிறது. கட்டடக் கட்டமைப்பு, நகர வசதி மேம்பாடு, சுகாதாரம், ஆயுட்காப்பீடு, அவசர சேவைகள், போக்குவரத்து, சுற்றுலா மற்றும் பலதுறைகளில் சாதனை படைக்க இருக்கும் இந்த மாதிரியான பயன்பாட்டு தொழில்நுட்பத்தை நாம் இனிவரும் காலங்களில் தவிர்க்க இயலாது என்பது அப்பட்டமான உண்மை.
www.earthmine.com என்ற தளத்தில் சென்று இதுபற்றி முழுமையாகக் காணுங்கள்.
கம்பிவடம் இல்லாத உலகம்!
விரைவில் கம்பிவடம் இல்லாத உலகத்தைப் பார்க்கப்போகிறோம். ஆமாம், இண்டெல் நிறுவனம் வை-ஃபை (Wi-Fi) தொழில்நுட்பத்தில் இயங்கும் நகரங்களைத்தாண்டி அதன் இணைப்பை கிராமங்கள் தோறும் நீட்டிப்பு செய்யும் வகையில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு கிராம இணைப்பு இயங்குதளம் (Rural Connectivity Platform) எனப்பெயரிடப்பட்டுள்ளது.
இதன் இயக்கமுறைப்படி, முதல் தொடர்புநீட்சி (Antenna) நகரத்தில் இயங்கும் வலையமைப்போடு இணைக்கப்படும். பின்னர் அடுத்தடுத்த தொடர்புநீட்சிகள் 60 மைல் தூரத்திற்கொருமுறை வைக்கப்பட்டு தொடர்பு நீட்டிக்கப்படும். புவியின் குவித்தன்மையின் காரணமாக அதற்குமேல் நீட்டிக்கமுடியாது.
இன்டெலின் ஆரம்பகால சோதனையில் வெற்றிகரமாக 30 மைல் தூரத்துக்கு எந்தவிதமான இடையூறுகளுமின்றி தகவல் பரிமாற்றம் நடத்தப்பட்டது. சாதாரண வை-ஃபை தொடர்புநீட்சிகளே இதில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதன் வீரியத்தை அதிகரிக்க சிறப்பு வானலை மென்பொருட்கள் உதவி செய்தன.
இரு முனை கட்டமைப்பை ஏற்படுத்த வெறும் ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மட்டுமே செலவாகுமென்று இண்டெல் தெரிவிக்கிறது. இந்த சோதனை இந்தியா, பனாமா, வியட்நாம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் செய்யப்பட்டது. வியாபார ரீதியாக இந்த செயல்பாடு 2008ம் ஆண்டின் மத்தியில் வரவிருக்கிறது…
காகிதத்தில் கப்பல் செய்து….

ஜப்பானிய அறிவியலாளர்கள் முற்றிலும் காகிதத்தால் ஆன விமானத்தை உருவாக்கியுள்ளார்கள். ஜப்பானின் வானவியலாளர் யசுயுகி மியாசகி ‘இந்த முயற்சி முழுமையாக வெற்றி பெற்றுள்ளதாகவும், இதன்மூலம் முற்றிலும் காகித்தால் ஆன விண்கலன்களை உருவாக்கி பயணித்து திரும்ப வரும்போது காற்றில் விண்கலனின் உராய்வு மற்றும் அதனால் உண்டாகும் வெப்பம் ஆகியவற்றைக் குறைத்து தரையிறங்குவதை எளிதாக்க முடியும்’ என்று கூறியுள்ளாராம்.
(என்ன கொடுமைங்க இது… காகித்தத்தில் நாமெல்லாம் சின்ன வயசுல செஞ்ச குட்டி விமானங்களை இவர்கள் காப்பி அடிச்சுட்டாங்களோ?)
ஜப்பானிய வான்வெளி ஆராய்ச்சிக்கழகம் இதை ஏற்றுக்கொண்டு வருடத்துக்கு மூன்று இலட்சம் டாலர்களை இதற்கான தொடர் ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்போவதாக அறிவித்துள்ளது.
முழு கட்டுரையும் ஆங்கிலத்தில் படிக்க… இங்கே சொடுக்கவும்
புற்று நோய் வளர்கிறது!
புகைப்பதனால், மது அருந்துவதனால் மற்றும் சூரிய ஒளியில் அதிகநேரம் நேரடியாக இருப்பதால் புற்றுநோய் உண்டாகிறது. இது பெற்றோர் வழியாக குழந்தைகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் புற்றுநோயால் இறந்ததாக 2007ம் ஆண்டு அறியப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் அதிகமாகிக்கொண்டுள்ளது. இருந்தாலும் அதன்மூலம் இறப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன்மூலம் புற்றுநோயுடன் வாழ்பவரின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. என்பதை அறியலாம். இது விஞ்ஞான வளர்ச்சியின் விளைவு என்றாலும் மனிதனின் வாழ்க்கையில் உணவு மற்றும் வேறு வகையான் பழக்கங்களின் மாற்றங்களினாலும் இருக்கலாம்.
2500 ஆண்டுகள் பழமையான நகரம்!
ஒரிசாவில் புவனேசுவரில் 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒரு நகரம் கண்டறியப்பட்டுள்ளது. உலகில் இதுவரை பெரிய நாகரீகமாகக் கருதப்பட்ட ஏதென்ஸ் நகரத்தைவிட இது பெரியதாக இருக்கும் என்று தொல்வியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்!
ஒரிசாவின் பழமையான நாகரீகத்துக்குக்கு இது ஒரு சான்றாகக் கருதப்படுகிறது. மேலும் வரலாற்றின் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த நகர வாழ்க்கைக்குச் சான்றாக தொல்பொருட்களும் தடயங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன!
அசைபடத்தில் பார்க்க: http://specials.rediff.com/news/2008/feb/15video2.htm
நீங்கள் அரிப்பினால் அவதிப்படுகிறவரா இதோ ஒரு நல்ல செய்தி!

டெர்மாசில்க் என்ற துணிவகைகளின் சிறப்புத்தன்மைகளை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் உடலில் அரிப்பைக் குறைக்க முடியும் என்று தெரிகிறது. ஒரு கணக்கெடுப்பில் 23 விழுக்காடு மக்கள் உடல் அரிப்பினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிகிறது! அதில் 66 விழுக்காட்டினர் உடலின் வெப்பநிலை மாறுபாட்டால் பாதிக்கப் படுவதும் தெரியவந்துள்ளது. இந்தப்பிரச்சனைகளையெல்லாம் போக்க இந்த புதுவகைத்துணிகள் உதவியாக இருக்கும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகைத் துணிகள் இரவுநேர உடைகள் தயாரிக்கப் பெரிதும் விரும்ப்பப்படும் என்று தெரிகிறது. உடல் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் இந்தவகைத் துணிகளால் நாம் இனி நிம்மதியாய் உறங்க முடியும் என நம்பலாம்.
-”தி ஹிந்து” நாளேட்டிலிருந்து
யாஹூவை விலைபேசியாச்சு!

இணைய வல்லவனாக ஒருகாலத்தில் முதன்மையானவனாகத் திகழ்ந்த யாஹூ வை மென்பொருள் வல்லவன் மைக்ரோசாஃப்ட் விலை பேசியுள்ளது! அதன் விலையில் ஒன்பது மடங்கு அதிகமாகத் தந்து (44.6 பில்லியன் டாலர்) அந்த நிறுவனத்தை வாங்கிக்கொள்ள அறிவிப்பு செய்துள்ளது. அதற்கான காரணமும் உண்டு. யாஹுவையும் எம்.எஸ்.என்.ஐயும் இணைப்பதன் மூலமும் கூகுளையும் மிஞ்சிவிடலாம் என்ற கணக்கில் மைக்ரோசாஃப்ட் யோசிக்கிறது. மைக்ரோசாஃப்ட்டின் 2009க்கான முன்னோட்ட வருமானத்தின் 21 மடங்கை கூகுள் இப்போதே சம்பாதித்துக் கொண்டுள்ளது. யாஹூ மற்றும் எம்.எஸ்.என். இணைப்பு மூலம் 23 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டமுடியும் அதனால் இந்த அதிகவிலை பரவாயில்லை என்று சொல்கிறது மைக்ரோசாஃப்ட். கொஞ்சம் அதிகம்தான். ஏன் என்றால் மின்னஞ்சல் சேவை தவிர சொல்லிக்கொள்ள அதில் ஒன்றுமில்லை! அதுவும் யாஹூவின் மின்னஞ்சல் சேவை வர வர மாமியாள் கதைதான் இதற்குப்போய் இவ்வளவு காசா என்று யோசித்தால் அதில் மிஞ்சுவது காலகாலமாய் இருக்கும் யாஹூவின் வாடிக்கையாளர்கள்தான் மதிப்பு மிகுந்தவர்கள் என்பது விளங்கும். வேறென்ன இதில் சொல்ல!

3 மறுமொழிகள்